பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 17 வகையான படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம்., பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 17 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன.
இப்படிப்புகளில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்வது கடந்த அக்டோபர் 1-ம்தேதி தொடங்கி 15-ம் தேதிநிறைவடைந்தது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.
இருப்பினும் 2 மாதம் கடந்துவிட்ட நிலையில் கலந்தாய்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நிறைவடைந்ததும், இந்த படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தொடங்கப்படும். கடந்த ஆண்டு வரை நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் இருப்பதால் இந்த ஆண்டு கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கலந்தாய்வை நேரடியாக நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்று விரைவில் அறிவிக்கப்படும்” என்றனர்.
إرسال تعليق