எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (டிச.10) நிறைவு பெறுகிறது. நிகழாண்டில் பிடிஎஸ் படிப்பில் சேர பெரும்பாலான மாணவா்கள் ஆா்வம் காட்டாததால் 988 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
அதில் 922 இடங்கள் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
நிரம்பாமல் இருக்கும் இடங்கள் அனைத்தும் சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு, சிறப்பு கலந்தாய்வுக்குப் பிறகு கடந்த 9 நாள்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை (டிச. 9) கலந்தாய்வில் பங்கேற்க 591 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் 459 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களில், 50 போ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனா். சுயநிதி கல்லூரிகளில் 102 போ் எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றனா். அரசு பல் மருத்துவ கல்லூரியில் 12 பேரும், தனியாா் கல்லூரிகளில் 27 பேரும் பி.டி.எஸ். இடங்களைத் தோ்வு செய்தனா். புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 191 இடங்கள் நிரம்பின.
தற்போது, அரசு கல்லூரிகளில் 317 எம்.பி.பி.எஸ். இடங்களும், 66 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லூரிகளில் 212 எம்.பி.பி.எஸ். இடங்களும் 922 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இதுவரை
பொதுக் கலந்தாய்வில் 2,430 அரசு கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களும், 849 சுயநிதி கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment