அரசுப் பணி நியமனங்களின்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு துறைகளில் தினக்கூலி பணியாளர்களாக 10 ஆண்டு பணியை கடந்த 2006 ஜன.1-ம் தேதி நிறைவு செய்தவர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்று வதற்கு, 2006 பிப்.8-ம் தேதி அப்போதைய முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அரசாணையில் மாற்றங்கள்
அதில் சிறப்பு நிகழ்வுகள் இருந்ததால், விதிகளில் தளர்வு அளிக்க அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், அந்த உத்தரவுகளை அமல்படுத்த சிக்கல்கள் இருந்ததால், அரசாணையில் கடந்த 2013-ம் ஆண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தினக்கூலி பணிகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலானது. அந்த வழக்கில், ‘கர்நாடக அரசு - உமாதேவி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வெளியிட்ட உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பணி நியமனத்துக்கான விதிகளை மாநில அரசு வகுத்திருந்தால், அதன் அடிப்படையில்தான் நியமனங்கள் இருக்க வேண்டும்.
எனவே, தமிழக அரசில் அடிப்படை பணிகள் உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க, அதற்காக வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். பணி நியமனத்துக்காக விண்ணப்பிப்போரின் கோரிக்கைகள், உச்ச நீதிமன்ற வழக்கில் ஒருமித்துப் போகிறதா என்பதை பார்க்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவு பின்பற்றப்படுவதை துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment