நீட் 2021 தேர்வு ரத்து செய்யப்படுமா என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெபினாரில் விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா, எவ்வாறு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுடன் நேரலை வெபினார் மூலம் இன்று கலந்துரையாடி வருகிறார். மாணவர்கள், ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சரிடம் தங்களின் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
அதில், மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 ரத்து செய்யப்படுமா என்று மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''நீட் 2021 தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் 2020 தேர்வு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம்.
எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஆனால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ''இதுகுறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்டக் குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள், எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
No comments:
Post a Comment