இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில், இந்தியப் படைகள் வெற்றி பெற்றன. குறிப்பாக, இப்போரில் பாகிஸ்தான் நாட்டு 4 கடற்படைக் கப்பல்களை இந்தியக் கடற்படை மூழ்கடித்தது. இதை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் டிச.4-ம் தேதி முதல் ஒருவார காலத்துக்கு கடற்படை வாரம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, இந்தியக் கடற்படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான கடற்படை தினத்தை முன்னிட்டு, தமிழகம், புதுச்சேரி கடற்படை அலுவலகம் சார்பில், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விநாடி வினா போட்டியும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழகம், புதுச்சேரி கடற்படை பிரிவு அதிகாரி ரியர் அட்மிரல் புனித் சதா பரிசுகளை வழங்கி பாராட்டினார். பாதுகாப்பு துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment