அதிக அளவிலான பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் உள்ளதைப் போன்ற புதிய வசதிகளை சிக்னல் செயலி அறிமுகம் செய்து வருகிறது.
பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் மட்டுமே செயலியை தொடர முடியும் என்றும், அனுமதிக்காவிட்டால் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்றும் அறிவித்திருந்தது.
எனினும் கடும் எதிர்ப்புகளால் அதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
இதனிடையே வாட்ஸ்ஆப் செயலிக்கு பதிலாக சிக்னல் செயலி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதிக அளவிலான பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ்ஆப் போன்று சகல வசதிகளையும் சிக்னல் செயலி அறிமுகம் செய்துள்ளது.
சாட் பின்புலப் படங்களை மாற்றிக்கொள்ளும் வசதியை சிக்னல் செயலி தனது புதிய அப்டேட்டில் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனத்தை போன்றுள்ளதாக வெப் இன்ஃபோ தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்-பில் படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பயனர்கள் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளது. அந்த வசதியை சிக்னல் செயலியும் அறிமுகம் செய்துள்ளது.
சிக்னல் செயலில் ஏற்கெனவே குழு விடியோ அழைப்பு வசதி உள்ள நிலையில் அவற்றில் 5 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் தற்போது 8 பேருக்கு ஒரே நேரத்தில் விடியோ அழைப்பு விடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் லிங்க் மூலம் குழுவில் இணையும் வசதியையும் சிக்னல் செயலி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி வாட்ஸ்ஆப்-பில் ஏற்கெனவே உள்ளது.
வாட்ஸ்ஆப்-பில் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி ஏற்கெனவே நடைமுறையிலுள்ள நிலையில், சிக்னல் செயலியும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்ஆப்-பில் ஏற்கெனவே உள்ள, அழைப்புகளுக்கு குறைந்த அளவிலான தரவுகளை பயன்படுத்தும் வசதியை சிக்னல் செயலியும் மேம்படுத்தியுள்ளது.
மேலும் சாட் தளத்தை புதுப்பிக்கும் வகையிலான முயற்சிகளில் சிக்னல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 100 முதல் 200 மில்லியன் பயனர்களை உருவாக்கும் வகையில் முகநூல் நிறுவனத்திற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் 19 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் முகநூல் நிறுவனத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்திலிருந்து தற்போதைய சிக்னல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஆக்டன் விலகினார்.
Post a Comment