மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணிகளுக்கு நேர்காணல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 



 மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதியன்று தமிழ்நாடு மருத்துவப் பணி மற்றும் மருத்துவ சார்நிலைப் பணிகளில் மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 4,308 பேர் கலந்துகொண்டனர். 

 தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 128 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விண்ணப்பதாரர்களின் பதிவெண் விவரம் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!