மேடை ஆளுமை பேச்சாளர்களுக்கு மிக அவசியம்! பிரபல பேச்சாளர் 


பாரதி பாஸ்கர் பட்டிமன்றங்களில் ஜொலிப்பது பற்றி, பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர்: பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போதே, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் பட்டிமன்றங்களில் பங்கேற்று, 17 ஆண்டுகள் ஆகின்றன. நான் இந்த பட்டிமன்றங்களில் நுழைவதற்கு முன்பே, பட்டிமன்ற புகழ் ராஜா பிரபலம்.அதற்கு முன், சுகிசிவம், அவ்வை நடராஜன் போன்றோரின் பட்டிமன்றங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். பட்டிமன்றங்களில் பேச்சாளராக நான் அறிமுகமான காலங்களில், இப்போது இருப்பது போன்ற வசதிகளும் இல்லை. என் இரு பெண் குழந்தைகளும் ரொம்ப சின்ன குழந்தைகளாக இருந்தனர். அவர்களை பார்த்துக் கொள்ள மாமியார் இல்லாத குறையை, மாமனார் போக்கினார்.பெண் பேச்சாளர்களுக்கு இருக்கும் பல விதமான கஷ்டங்கள் எனக்கும் இருக்கத் தான் செய்தன. குறிப்பாக, பயணங்களின் போது, மிகுந்த சிரமங்களை உணர்ந்தேன். எனினும், பாப்பையா மற்றும் ராஜா, எனக்கு ஏற்ற வகையில், வசதியான நாட்களில் தான் நிகழ்ச்சிகளை திட்டமிடுவர்.சின்ன வயதில் என்னை என் குழந்தைகள் அதிகமாக மிஸ் செய்தனர். அவர்கள் அதற்காக நிறைய தியாகங்களை செய்தனர். என் கணவரும் அப்படித் தான். அவரின் துணையின்றி, என்னால் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்து இருக்க முடியாது.பட்டிமன்றங்களில் என்ன பேச வேண்டும்; எப்படி பேச வேண்டும் என நாங்கள் யாரும், நிகழ்ச்சிக்கு முன் குறிப்பெடுப்பதே இல்லை. சில சமயங்களில், குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து, நடுவர் சிறு குறிப்பு கொடுப்பார். பெரும்பாலான நேரங்களில், சுயமாகத் தான் பேசுகிறோம். அதனால் தான், இத்தனை இயல்பாக இந்த நிகழ்ச்சி வந்துள்ளது.மேடையில் பேசும் போது, கற்க வேண்டிய முதல் விஷயம், மேடை ஆளுமை தான். மேடையை நம் வசம் ஆக்கிக் கொண்டு விட்டால், எதிர்த்து நின்று கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தவே மாட்டார்கள். எனினும், ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு புதுப்புது தகவலையும், செயலையும் கற்றுக் கொடுக்கவே செய்தது. பேச்சாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமே, டென்ஷன் இல்லாமல் பதில் சொல்வது தான். அந்தக் கலையை கற்றுக் கொண்டால், பேச்சு நம் வசம் வந்து விடும். இந்த கலை எளிதாக எனக்கு வந்து விடவில்லை. ஆரம்ப நாட்களில், ரொம்பவும் கோபப்படுவேன். எதிராளிகள் தப்பாக பேசி விட்டால், அவர்களை மேடையிலேயே தக்க பதில் கூறி, திக்குமுக்காடச் செய்து விடுவேன். எல்லா பேச்சுக்கும், முன்கூட்டியே தயாரித்து தான் செல்வேன். குறிப்பாக, இலக்கியக் கூட்டங்களுக்கு, தனிப்பட்ட முறையில் நன்கு தயாரித்த பிறகே மேடை ஏறுவேன்!

Post a Comment

Previous Post Next Post

Search here!