NEET நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; கல்வித் தரத்தைப் பாதிக்கும்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் 


 ஒரே நாடு, ஒரே மெரிட் என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வித் தரத்தை பாதிக்கும் என புதுவையில் 10% ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புதுவை அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவில் உடன்படாததால் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த 12-ம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி என்பவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதில், கடந்த 2016 -17 ம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்ற 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தனியார் பள்ளியில் பயின்ற மாணர்வர்கள் 243 பேர் முதல் 402 பேர் வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதால், இந்த விவகாரம் மத்திய குடும்ப நல அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அவர்களின் ஆலோசனைகளை நாடியுள்ளோம். ஒரே நாடு, ஒரே மெரிட் என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தை பாதிக்கும். தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை”. என மத்திய அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்த கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்த வாய்ப்பு குறைவு எனவும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமென்றும் கோரினார். மாணவ மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “மத்திய அரசு காலம் கடத்தி வருவது மாணவர்களின் மருத்தவக் கனவைப் பாதிக்கும். மாநில அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதென உச்சநீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2016-ல் இருந்து தற்போது வரை புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு கூட அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை”. என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!