தேர்வு முறைகேடில் ஈடுபட்டால் போலீஸ் நடவடிக்கை: அண்ணா பல்கலை எச்சரிக்கை 

 இன்ஜினியரிங் மாணவர்களுக்கான, ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான விதிமுறைகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. முறைகேடில் ஈடுபடுவோர் மீது, போலீசில் புகார் செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான, நவ., -- டிச., மாத செமஸ்டர் தேர்வு, பிப்.,1 முதல், 17 வரை, ஆன்லைன் வழியில் நடக்க உள்ளது.ஏற்கனவே, மே மாத தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் முறையாக ஆன்லைனில் தேர்வு நடக்க உள்ளது. இந்த ஆன்லைன் தேர்வு, 60 மதிப்பெண்களுக்கு, ஒரு மணி நேரம் நடக்கும்; பின், 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும் என்றும் அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.தேர்வு குறித்து, பல்கலை அறிவித்துள்ள விதிமுறைகள்:ஆன்லைன் தேர்வை எழுதும்போது, கவனமாக எழுத வேண்டும்; தேர்வு எழுதும்போது, அருகில் யாரையும் வைத்துக் கொள்ளக் கூடாது; கேமராவை வேறு எந்த பக்கத்திலும் திருப்பக் கூடாது.ஆன்லைன் தேர்வில் காப்பி அடித்தல் போன்ற முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், போலீசில் புகார் அளிக்கப்படும். ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் தேர்வை எழுத முடியாமல் போனாலோ அல்லது பாதியில் எழுத முடியாமல் போனாலோ, வேறு தேதியில் நேரடி எழுத்துத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.தேர்வு எழுதும், லேப்டாப், மொபைல் போன், கணினி போன்ற மின்னணு சாதனம் மற்றும் மின் இணைப்பு போன்றவை சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வரும், 29, 30ம் தேதிகளில், ஆன்லைனிலேயே மாதிரி பயிற்சித் தேர்வு நடத்தப்படும். அரியர் மாணவர்கள் மற்றும் தொலைநிலைக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, பிப்., 13 முதல், மார்ச், 2 வரை தேர்வு நடக்கும்.இவ்வாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!