பல்கலைக்கழகங்கள் நடத்திய ‘அரியர்’ தேர்வு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு காலஅவகாசம் ஐகோர்ட்டு உத்தரவு 


 கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் ‘அரியர்’ தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆன்லைன் அல்லது ஆப் லைன் மூலம் ‘அரியர்’ தேர்வுகளை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் அந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. ‘அரியர்’ தேர்வுகள் நடத்தியது குறித்து பல்கலைக்கழகங்களிடம் இருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பல்கலைக்கழகங்களால் ரத்து செய்யப்பட்ட ‘அரியர்’ தேர்வுகளை நடத்தியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய 4 வாரம் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!