இணையவழிக் கல்வி அனைத்துத் தரப்புக்கும் வரப்பிரசாதம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேச்சு 


 இணையவழிக் கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் வரப்பிரசாதம் போன்றது என்ற் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.செல்வம் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இணையவழி பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது. 

 இதனடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைக்கல்வி பணியகம், 11 இணையவழி பட்டப் படிப்புகளைத் தொடங்க திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கியது. பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மையத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இணையவழி பட்டப் படிப்பு வகுப்புகளின் தொடக்க விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 

 பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.செல்வம், இணையவழி பட்டப் படிப்பு வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசும்போது,

 "இணையவழிக் கல்வி என்பது அனைத்துத் தரப்பினருக்கும் வரப்பிரசாதம் போன்றது. இன்றைய காலகட்டத்தில் இணையவழிக் கல்வி தவிர்க்க முடியாததாகியுள்ளது. எவரும், எவ்விடத்தில் இருந்தும் தாங்கள் விரும்பும் கல்வியை இணையவழிக் கல்வி முறையில் கற்க முடியும்" என்றார். 


 இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளர் க.கோபிநாத், துணைப் பதிவாளர் கலா யோகநாதன், பல்கலைக்கழக தொலைக்கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மைய இயக்குநர் ஏ.எட்வர்ட் வில்லியம் பெஞ்மின், பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.செல்வம், ஆர்.பாபு ராஜேந்திரன், தேர்வாணையர் எஸ்.சீனிவாச ராகவன், நிதி அலுவலர் எல்.கணேசன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இணையவழியில் தொடங்கப்பட்டுள்ள படிப்புகள்
இளநிலை- தமிழ், ஆங்கிலம், வணிக நிர்வாகவியல். முதுநிலை- தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், தகவல் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல்

Post a Comment

Previous Post Next Post

Search here!