தமிழகத்தில், ஆபரண தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


உலகம் முழுதும், 2020ல், கொரோனா தொற்று பரவியது. தொழில் துறைகள் பாதிக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்ததால், தங்கம் விலை உயர்ந்தது.தமிழகத்தில், 2020 ஆக., 7ல், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 5,416 ரூபாய்க்கும்; சவரன், 43 ஆயிரத்து, 328 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலை. பின், தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்தாலும், புதிய உச்சத்தை எட்டவில்லை.கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,453 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 624 ரூபாய்க்கும் விற்பனையானது.கிராம் வெள்ளி, 73.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை மாறவில்லை. 

 இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 42 ரூபாய் உயர்ந்து, 4,495 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 336 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து, 960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 50 காசு உயர்ந்து, 74.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்துள்ளது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் சார்பில், மணப்பெண்ணுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. அத்தகையோருக்கு, தங்கம் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பொருளாதாரத்தை வீழ்த்த கூடிய வகையில், கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம், அனைத்து நாடுகளிலும் உள்ளது. இதனால், தொடர்ந்து பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலக முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.உலக சந்தையில், தங்கம் விலை பெருமளவு உயர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால், தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து, தங்கம் விலை உயரும்.இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

Previous Post Next Post

Search here!