தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக் போட்டி குறித்த வினாடி -வினா போட்டியில் பங்கேற்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
வினாடி-வினா போட்டி
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மேசைப்பந்து போட்டியில் சத்தியன், சரத்கமல், வாள்சண்டை போட்டியில் பவானிதேவி மற்றும் பாய்மரப்படகு ஒட்டுதல் போட்டியில் கணபதி, வருண், தக்கர், நேத்ரா, குமணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் அனைத்து வயதினருக்குமான ஒலிம்பிக் வினாடி-வினா போட்டிகள் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.
இணையதளம் மூலம் பங்கேற்கலாம்
இப்போட்டிகள் கடந்த மாதம் தொடங்கி வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) வரை இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. மேற்படி ஒலிம்பிக் வினாடி வினா போட்டிகளில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வயதினரும் https://fitindia.gov.in/ என்ற இணையதளம் மூலம் தனித்தனியாக காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கலந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இதில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைக்கப்படவுள்ள ஒலிம்பிக் செல்பி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
வெற்றிப் பெற்றவர்கள் எடுத்த புகைப்படம் அன்னை சத்யா விளையாட்டரங்கில், அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in. பதிவேற்றம் செய்யப்படும். எனவே ஒலிம்பிக் வினாடி வினா போட்டிகளில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வயதினரும் அதிகளவில் கலந்து கொண்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் கூடுதல் விபரங்கள் பெற 04362-235633 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment