பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும், பாடத்திட்டங்களை குறைக்கலாமா? என்பது பற்றியும் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

சுழற்சி முறையில்... பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

 நூலகத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, சரிசெய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க இருக்கிறோம். செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து இருந்தார். அப்படி திறக்கப்படும்போது 50 சதவீதம் அடிப்படையில், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள். 

வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளிகள் எந்த அளவுக்கு தயார்நிலையில் இருக்கவேண்டும்? என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், முன்னேற்பாடுகள் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்று ஆலோசித்து, அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுதான் வருகின்றன. 

ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு புறம் நடந்தாலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார். பாடங்கள் குறைக்கப்படுகிறதா? சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்ததாக கூறப்படுகிறது. 

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்தும், அவ்வாறு குறைத்தால் எந்த அளவுக்கு குறைக்க வேண்டும்? எந்தெந்த பாடங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலோசனையின் அடிப்படையில் பாடங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!