அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என்றும், அனைத்து வேலைநாட்களிலும் ஆசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வகுப்புகள்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன. வகுப்புகளை போலவே, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ஆன்லைன் வழியாகவே நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே தொடங்கி நடைபெறும் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்து இருந்தனர். இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்குனர், உயர்கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்கள் வரவேண்டும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு தவிர, மற்ற அனைத்து மாணவர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் 9-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்தது.
அதன்படி, உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் இதை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். மேலும், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும். இந்த கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் அனைத்து வேலைநாட்களிலும் தவறாமல் கல்லூரிக்கு வரவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment