மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 


திருவண்ணாமலை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழக மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள், 2021-22-ம் கல்வி ஆண்டுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து “இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5" என்ற முகவரிக்கும் அல்லது tngovtitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!