‘நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம்’ ‘உங்கள் உயிர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் முக்கியம்’ மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் - EDUNTZ

Latest

Search here!

الخميس، 16 سبتمبر 2021

‘நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம்’ ‘உங்கள் உயிர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் முக்கியம்’ மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

‘நீங்கள்தான் நாட்டின் எதிர்காலம்’ ‘உங்கள் உயிர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் முக்கியம்’ மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் ‘‘மாணவ-மாணவிகளின் உயிர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் முக்கியம். மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம்’’ என்று மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக மாணவ-மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தொடரும் தற்கொலை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். 

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டபோதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று (நேற்று முன்தினம்) அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு (நேற்று) வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்து விட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன். 

கல்நெஞ்சத்தோடு மத்திய அரசு பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான், நீட் தேர்வு கொண்டு வந்தது. படிப்பதற்கு தகுதி தேவையில்லை. படித்தால் தன்னால் தகுதி வந்து விடும். பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு ஏழை-எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக்கூடியது என்றுதான், தி.மு.க. இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதுக்கு முன்னால் நாம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போதும் நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்த தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள். மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. 

ஆனால் மத்திய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. சட்டமன்றத்தில் தனி மசோதா கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது. அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். 

அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். விதியை மதியால் வெல்லலாம் இந்த சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. 

உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக்கேட்கிறேன். உங்களால் டாக்டர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள். கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். 

இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும். மனநல ஆலோசனை நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق