கல்வித்துறையை மீட்டெடுக்க 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

கல்வித்துறையை மீட்டெடுக்க 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்கக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கடந்த சில ஆண்டுகளில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையிலான சேர்க்கை செயல்முறை, சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்துள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையை இணைத்து அனுப்புவதாக, அக்கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் தெரிவித்துள்ளார். 

மேலும், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சமீபத்தில் தமிழக சட்டசபையில் 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021' என்ற சட்ட முன்வடிவினை நிறைவேற்றியுள்ளதாகவும், அந்தச் சட்ட முன்வடிவின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே தங்களது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையைத் தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும். அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 

இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் தான் எதிர்நோக்குகிறேன். இதுகுறித்து, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, லோக்சபா தி.மு.க., எம்.பி.,க்கள் குழு நேரில் சென்று வழங்கி, இப்பிரச்னை குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டும். இவ்வாறு தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Great decision

    அருமையான முனைப்பு! ஒன்றிய சாத்தானின் கோரக்கொடுமையைத் தடுத்நு விரட்டி அடிக்கும் பிரம்மாஸ்திரம
    இதுதான்!
    சபாஷ்..முதல்வரே!

    ReplyDelete