800 சிற்பங்களுடன் அதிசய ‘படிக்கிணறு’ 

குஜராத் மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க படிக்கிணறுகள் அமைக்கும் வழக்கம் கி.பி 4-ம் நூற்றாண்டில் இருந்து இருந்திருக்கிறது. அகமதாபாத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் இருக்கிறது பதான் நகரம்.பசுமையான புல்வெளிக்கு நடுவே ’ராணி கி வாவ்’ எனப்படும் மிகப்பிரமாண்டமான படிக்கிணறு அமைந்துள்ளது. ’படிக்கிணறுகளின் ராணி’ என்றே இதை அழைக்கலாம். 

உலகப் பாரம்பரிய சின்னங்களில் இதுவும் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, யுனெஸ்கோ மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சோலாங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவருடைய மனைவி ராணி உதயமதியால் இந்த படிக்கிணறு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. 

64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த படிக்கிணறு, 7 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. கடைசி படிக்கட்டுக்கு கீழே 30 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை சித்பூருக்கு செல்கிறது. போர்க்காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச்செல்ல அவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது. கி.பி 1063 முதல் 1068 வரை இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார்கள். 

காலப்போக்கில் இந்த படிக்கட்டு கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நீண்ட காலம் மக்களுக்கு இதுபற்றி தெரியாமலே போய்விட்டது. 1960-ம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாகக்கன்னிகைகள், கண்ணாடியைப் பார்த்து பொட்டு வைக்கும் பெண், யானைகள் போன்று 800-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் பக்கவாட்டுச் சுவர்களில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. 

தூண்களிலும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் இந்தப் படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. 700 கிணறுகள் வரை இருந்திருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். 

இதுவரை 120 படிக்கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அடாலஜ் நகரில் உள்ள படிக்கிணறும் புகழ்பெற்றது. இது 5 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!