ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உலகப்பிரசித்தம். இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்பு பலகாரம். தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இது விரும்பி உண்ணப்படுகிறது. 

இதன் வரலாறு பல நூற்றாண்டு பின்புலம் உடையது. பால் மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களை தொடக்க காலத்திலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். புராண கதைகளும் இலக்கியமும் இதற்கு சான்றாக இருக்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச்சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். 

இதுபால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு, கூட்டுறவு பால்பண்னையாலும், சிறு தொழில் முனைவோராலும் பெரிய அளவில் இந்த தொழில் முன்னெடுக்கப்பட்டது. 

இன்று இந்தத் தயாரிப்பு நூற்றுக்கணக்கான கடைகளாக விரிவடைந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் பாலுக்கு உள்ள தனிச்சுவையே இதற்கு காரணம் எனச் சொன்னாலும் இங்குள்ளவர்கள் பால்கோவா தயாரிப்பில் எடுத்துக்கொள்ளும் அதிக அக்கறையும் ஒரு பிரதான அம்சம். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்திருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!