அடுத்த ஆண்டில் இருந்து அறிவியல் திறனறி தேர்வு மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.
அறிவியல் திறனறி தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் என்ற திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
மத்திய அரசின் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (கே.வி.பி.ஒய்) என்ற திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு அறிவியல் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், பி.எச்டி. படிப்புக்கு செல்லும் வரை, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தாய்மொழியில் படித்தால் மட்டுமே மாணவர்களால் எளிதில் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை புரிந்து கொள்ள முடியும். தாய்மொழியில் இந்த தேர்வை நடத்தாததால், அறிவியல் ஆர்வம் கொண்ட அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே கே.வி.பி.ஒய். தேர்வை அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தவும், தமிழகத்தில் தேர்வு மையங்களை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அடுத்த ஆண்டில் இருந்து...
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 7-ந்தேதி நடக்க இருந்த இந்தத்தேர்வை ஒத்திவைக்கும்படியும், மாநில மொழிகளிலும் இந்தத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, இந்த தேர்வு கம்ப்யூட்டர் மூலமாக நடத்தப்படுகிறது. எனவே பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி இருப்பதால் குறைந்தது 6 மாத காலம் தேவைப்படுகிறது.
இதனால் அடுத்த ஆண்டில் இருந்து அறிவியல் திறனறி தேர்வு (கே.வி.பி.ஒய். திட்டத்தேர்வு) அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும். இந்த ஆண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தி, ஆங்கிலத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும், என்று வாதாடினார்.
பிரமாணப்பத்திரம்
இதையடுத்து நீதிபதிகள், அடுத்த ஆண்டில் இருந்து இந்தத்தேர்வை மாநில மொழிகளில் நடத்துவோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்து, விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Post a Comment