தினம் ஒரு தகவல் தக்காளி செடியின் சிறப்பு குணம் நம் அன்றாட உணவில் தக்காளி தவிர்க்க முடியாத அங்கம். தக்காளி இல்லாமல் வீட்டில் சமையலே இல்லை. மற்ற எந்தத் தாவரங்களுக்கும் இல்லாத சிறப்பு குணம் ஒன்று தக்காளிச் செடிக்கு இருக்கிறது. 

பொதுவாக விலங்கினங்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது தங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றன. ஒரு சிறு பூச்சிகூட தன்னிடம் இருக்கும் விஷத்தன்மையால் எதிரியை தாக்கி அழிக்கிறது அல்லது காயப்படுத்துகிறது. ஆனால், பூச்சிகளைவிட ஆயிரம் மடங்கு பெரிதாக இருக்கும் தாவரங்கள் ஏன் எதிரிகளிடம் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை? தாவரங்களுக்கு உணர்வுத்திறன் இல்லை. 

அதனால்தான் எதிரிகளை கண்டுகொள்ள முடிவதில்லை என்று விஞ்ஞானிகள் சொல்லி வந்தார்கள். ஆனால், தாவரங்களுக்கும் விலங்குகள் போலவே உணர்வுகள் இருப்பதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தாவரம்தான் தக்காளிச் செடி. எதிரிகள் வந்தால் தன்னை நெருங்க விடாமல் செய்கிற மாய வித்தையை தக்காளிச் செடி தெரிந்துவைத்திருக்கிறது. அப்படி என்ன செய்கிறது? என கேட்கலாம். 

 ஒரு பூச்சி தக்காளிச் செடி மீது அமர்ந்து இலையை மென்று தின்ன ஆரம்பிக்கும்போது தக்காளிச் செடியின் பிற பகுதிகள் எச்சரிக்கை அடைகின்றன. பாதிக்கப்பட்ட இலைப் பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்தி உடனடியாக அனுப்பப்படுகிறது. மின்சாரத்தந்தி போல் சமிக்ஞைகளாக இந்த எச்சரிக்கை செய்தி தக்காளிச் செடியின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தக்காளிச் செடியின் பாதிக்கப்படாத பிற பகுதிகள் ‘சிஸ்டமின்’ என்ற ஹார்மோனை சுரக்கின்றன (இது தாவரத்தின் ஒரு வகை அமினோ அமிலம்). இந்த ஹார்மோன், பூச்சிகளால் செரிக்க முடியாத வேதிப்பொருள். எனவே மேற்கொண்டு பூச்சிகள் முன்னேற முடியாமல் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரியைத் தக்காளிச்செடி விரட்டி அடித்து விடுகிறது. அதனால்தான் அழுகிய தக்காளி பழத்தை சாக்கடை கரையோரம் வீசி எறிந்தால்கூட அவை நன்றாக முளைத்துச் செழித்து வளர்ந்து விடுகின்றன.

Post a Comment

Previous Post Next Post

Search here!