ஐஸ்கிரீம் என்றால் பால் அல்லது பாலில் இருந்து பெறப்பட்ட பொருட்களை பதப்படுத்தி உறையவைக்கப்பட்டது என்று பொருள். அவற்றுடன் இனிப்பூட்டிகள், பழங்கள் அல்லது பழத்தில் இருந்து பெறப்பட்டவை, முட்டை ஆகியவற்றை சேர்த்தோ, சேர்க்காமலோ அது செய்யப்பட்டு இருக்கலாம். குல்பி, சாப்டி ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கும் இந்த வரையறை பொருந்தும். 

பால் மற்றும் பால் பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வதற்கு கூடுதலாக செலவாகும் என்று கருதி, வேறு சில தரம் குறைந்த பொருட்களை கொண்டு தயாரிக்கும்போது, நான்கில் ஒரு பங்குதான் செலவாகும், ஆனால் அதிக லாபம் கிடைக்கும் என மோசடி செய்யும் நிைலயும் சந்தையில் நிலவுகிறது. அதனால் உறையவைக்கப்பட்ட இனிப்பை, ஐஸ்கிரீம் என்ற போர்வையில் சில நிறுவனங்கள் விற்பனைக்கு அனுப்புகின்றன. 

ஒரு சாதாரண குடிமகனை பொறுத்தவரை ஐஸ்கிரீம் என்பது மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும் ஒரு உணவுப் பொருள். வெவ்வேறு நிறங்களிலும், சுவைகளிலும் கிடைக்கும் என்பதை தாண்டி, அதில் ஆராய்ச்சி செய்ய வேறெதுவும் இல்லை என நினைக்கிறார்கள். சில பொருட்களின் அட்டையின் மீது ஐஸ்கிரீம் படம் இருக்கும், ஆனால் ‘ஐஸ்கிரீம்’ என்று வார்த்தை மட்டும் இருக்காது. ஓர் ஓரமாக ‘உறையவைக்கப்பட்ட இனிப்பு’ அதாவது ப்ரோஷன் டெசர்ட் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

வாடிக்கையாளர்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்? இரண்டு நிமிடத்தில் உருகிவிடக்கூடிய ஒரு பொருளுக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று யோசிக்கலாம். ஆனால், நாம் சாப்பிடுகிற பொருள், உடலுக்கு உகந்ததா என்று பார்ப்பது மிக, மிக முக்கியம். விலை கொடுத்து நாமே நோயை வரவழைத்து கொள்வதைவிட, உண்மையிலேயே நாம் வாங்குவது ஐஸ்கிரீம்தானா என்று சரிபார்த்து வாங்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!