காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர்- பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 

காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது. காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழிவகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேர்வதைத்தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும். 

அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். காது குடையும் போது தவறுதலாகச் செவிப்பறையில் பட்டு கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை காது குடைவதை தவிர்ப்பதே நல்லது. காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத்தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக்குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன. 

இவைதான் காதுக்குள் குரும்பியைச் சுரந்து, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுக்குள் ஏதேனும் பொருள் புகுந்து கண்ணுக்கு தெரிந்தால், தலையைச்சாய்த்து அதனை கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது.

Post a Comment

Previous Post Next Post

Search here!