சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் புத்தக கண்காட்சியை நடத்த இருக்கிறது. 

இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்வளர் சிறப்பு போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. அதன்படி, பன்னாட்டு பேச்சு போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் சிறப்பு போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. 

 இந்த போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க துணைத்தலைவர் பெ.மயிலவேலனின் 9884041948 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர், பள்ளி/ கல்லூரி, செல்போன், மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்துகொள்ளவேண்டும். 

அதில் பதிவுசெய்ய முடியாதவர்கள் புத்தக கண்காட்சி அரங்கில் நேரில் வந்தும் பதிவு செய்துகொள்ளலாம். பேச்சு, ஓவிய போட்டிகள் அதன்படி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியை பொறுத்தவரையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘நான் விரும்பும் நூல்' என்ற தலைப்பிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘நூல்களால் உயர்வோம்' என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது. 

ஓவியப்போட்டி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘நான் ரசித்த இயற்கை காட்சிகள்', 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘நான் விரும்பும் தேசியத்தலைவர்', 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘என்னை கவர்ந்த நூலகம்' என்ற தலைப்புகளில் நடக்க இருக்கிறது. இதேபோல் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 20 மற்றும் 26-ந்தேதிகளிலும், திருக்குறள் சிறப்பு போட்டி 26-ந்தேதியும் நடைபெற உள்ளது. வாசிப்புத் திறனை உலகளவில் மேம்படுத்தும் வகையில் ‘புத்தகங்களே பெரிய ஆயுதங்கள்', ‘வாசிப்பதால் நான் மனிதன்', ‘தமிழ் இலக்கியங்கள் கூறும் பண்பாட்டு மானிடவியல்' என்ற தலைப்புகளின்கீழ் பன்னாட்டு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. 

இதில் பங்குபெறும் மாணவர்கள் 2 நிமிடம் பேசிய வீடியோவை https://forms.gle/A2mevgUwzfRDEwSy7என்ற லிங்கில் பதிவுசெய்யவேண்டும். மேற்கண்ட தகவல் பபாசியின் செயலாளர் எஸ்.கே.முருகன், துணைத்தலைவர் பெ.மயிலவேலன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!