ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை பார்வையிட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 அரசு பள்ளிமாணவ-மாணவிகள் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமானத்தில் வந்த மாணவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லணை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், புதுக்குடி, முனைஞ்சிப்பட்டி, களக்காடு, ஏர்வாடி உள்பட பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் 21 மாணவ-மாணவிகள் ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் சென்னை ஐ.ஐ.டி.வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக ஆசிரியர்களுடன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். 

 சென்னை விமான நிலையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பிரபு ரஞ்சித் எடிசன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜே.இ.இ. நுழைவு தேர்வு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவே தயங்குவார்கள். ஆனால் முயற்சி எடுத்தால் அவர்களாலும் முடியும். அதற்கான வாய்ப்பு, பயிற்சி அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களும் ஐ.ஐ.டி. நிறுவனத்தில் நுழைய வேண்டும் என்ற லட்சியத்தை அடையும் விதமாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முயற்சி மேற்கொண்டார். அதன்படி முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களில் என்ஜினீயரிங் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்களை தேர்வு செய்தோம். 

 மொத்தம் 500 பேர் விருப்பம் தெரிவித்தனர். நேர்முக தேர்வு உள்பட பல கட்ட தேர்வுகளுக்கு பிறகு அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 அரசு பள்ளிகளை சேர்ந்த 13 மாணவிகள், 8 மாணவர்கள் என 21 பேரை தேர்வு செய்தோம். இவர்களை மருதகுளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னையா ஒரே இடத்தில் ஒருங்கிணைத்தார். அங்கு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2 நாள் பயணம் இந்த மாணவர்கள் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தை பார்வையிட்டால் மேலும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதால் அதற்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் கூறி இருந்தார். 

ஆனால் விமானத்தில் வருவோம் என அவர்கள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. திடீரென முடிவு செய்து முதல் முறையாக மாணவ-மாணவிகளை 2 நாள் பயணமாக விமானத்தில் சென்னை அழைத்து வந்துள்ளோம். இவர்கள் முதல் நாள் முழுவதும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை சுற்றி பார்க்கிறார்கள். அங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதுடன், ஜே.இ.இ. தேர்வுக்கு எப்படி தயாராவது? என கற்றுக்கொள்கிறார்கள். 2-வது நாள் பிர்லா கோளரங்கம் சென்று அங்குள்ள அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்பை பார்வையிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

 முதல் முறையாக விமானம் பேட்டை அரசு பள்ளி மாணவர் சுந்தர் ராஜேஷ் கூறும்போது, “முதன் முறையாக நாங்கள் விமானத்தில் வந்துள்ளோம். இது மகிழ்ச்சியாக உள்ளது. கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார். புதுக்குடி அரசு பள்ளி மாணவி செல்வநாயகி கூறும்போது, “சென்னை ஐ.ஐ.டி.யை பார்வையிட உள்ளோம். ஜே.இ.இ. தேர்வுக்காக பயிற்சி எடுக்க வந்து உள்ளோம். அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் விஷ்ணு முயற்சியால் பயிற்சி எடுத்து வருகிறோம். முதன் முறையாக எங்களை விமானத்தில் அழைத்து வந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!