தடுப்பூசி சான்றிதழில் திருத்தம் செய்துகொள்ள கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் பயனாளிகளே திருத்தி கொள்ளலாம் 

தடுப்பூசி சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அந்தவகையில் பயனாளிகளே திருத்தி கொள்ளலாம். கோவின் செயலி தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

மாநிலம் முழுவதும் இதுவரை 10.2 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சிலருக்கு அதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை. அதேபோன்று, சிலருக்கு சான்றிதழ்களில் அவர்களது சுயவிவரங்கள் தவறாக உள்ளன. இதையடுத்து இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும், மாநில அளவிலும் சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட உதவி மையங்களை அமைக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார். 

தற்போது அதற்கு அடுத்தகட்டமாக கோவின் செயலியிலேயே அவற்றை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால், அதற்கான உதவிகளை மக்களுக்கு ஏற்படுத்தித் தருமாறு டாக்டர் செல்வ விநாயகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். புதிய வசதி அறிமுகம் அதன்படி, கோவின் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய வசதியில் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டை எண்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

மேலும், வெளிநாட்டுப் பயணங்களுக்காக பாஸ்போர்ட் எண்ணையும் இணைக்கலாம். முதல் தவணை தடுப்பூசிக்கான சான்றுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவாகியிருந்தால், அதனை ஒரே சான்றிதழாக இணைக்கலாம். தடுப்பூசி செலுத்திய தேதியில் தவறு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளலாம். செல்போன் எண்களை மாற்றலாம். தெரியாத நபரின் சான்றிதழ்கள் மற்றொருவரின் எண்ணில் பதிவாகியிருந்தால், அதனை நீக்கலாம். 

இவ்வாறாக பல்வேறு வசதிகள் அதில் வழங்கப்பட்டு உள்ளன. இதனை கோவின் செயலியில் சென்று (ரைஸ் யேன் இஷ்ய்யூ) என்ற தெரிவை தேர்வு செய்து தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்றும், அதில் தீர்வு கிடைக்காவிட்டால் 104 எண்ணைத் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி மைய அதிகாரிகளின் எண்ணைப் பெற்று தீர்வு காணலாம் எனவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Search here!