தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நர்சுகளுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். 

 நர்ஸ் தின நிகழ்ச்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நேற்று நர்ஸ் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். 

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி நர்சுகள் மெழுகுவர்த்தி ஏந்தி நர்ஸ் தின உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு துறையினரை பாராட்டும் விதமாக இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரனுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர்கள் வழங்கினர். 

 மேலும் தீ விபத்தின்போது நோயாளிகளை காப்பாற்றிய நர்சுகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது மருத்துவத்துறையில் உறவுமுறை சார்ந்தவர்கள் நர்சுகள்தான். அவர்களை அனைவரும் ‘சிஸ்டர்’ என்று தான் அழைப்பார்கள். 

தமிழகத்தில் உலக நர்ஸ் தினத்தை முன்னிட்டு வரும் ஆண்டுகளில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் சிறப்பாக செயல்படும் நர்ஸ்களுக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தி.மு.க. அரசு பதவியேற்ற நாளில் இருந்து கொரோனா தொற்றை விட, எங்களுக்கு அதிக சவாலாக இருந்தது பணியிட மாறுதல்தான். இதுவரையில் 13 ஆயிரம் பேருக்கு எந்த விதமான செலவும் இல்லாமல் விரும்பிய இடத்திற்கு வெளிப்படையாக பணிமாறுதல் வழங்கி இருக்கிறோம். அதேபோல் கடந்த ஆட்சியில் மினி கிளினிக் மூலம் பணியமர்த்தப்பட்ட 1,820 பேருக்கு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு உள்ளது. 

 4 ஆயிரம் நர்ஸ்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.) மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகளை பணி நியமனம் செய்ய இருக்கிறோம்‌. கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு ஆஸ்பத்திரியில் சிறிய தவறு நடந்தாலும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரிதாகிறது. எனவே மருத்துவர்கள், நர்ஸ்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!