செய்திக்குறிப்பு 


மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

1. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள் 

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று (Person Studied in Tamil Medium- PSTM), கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை/பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின் பொது சேவை மையங்கள் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இச்சேவை வழங்கும் நிகழ்வின் தொடக்கமாக தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் PSTM சான்றை வழங்கினார். படிப்படியாக அனைத்து சேவைகளும் ஜூன் 2022க்குள் இணைய வழியில் பொது சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும். 
2. மின்பதிவேடுகள் (eRegisters) 

ஆசிரியர்களின் நிருவாகப்பணியை குறைப்பதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பதிவேடுகளை கணினிமயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின் தொடக்கமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இப்பதிவேடுகளை 2022-23ஆம் கல்வியாண்டு முதல் நேரடியாக (physical copy) பராமரிக்கத் தேவையில்லை, மின்பதிவேடுகளாக வைத்திருந்தால் மட்டும் போதுமானது. இதனால் ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த இயலும். படிப்படியாக ஜூன் 2022க்குள் பிற அனைத்து பதிவேடுகளும் மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும். 
3.இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி 
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர். இம்முறையில் ஏற்படுகின்ற சிரமங்களைக் களையும் வண்ணம் அவர்தம் கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 3 இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பயன்பெறுவர். 

4.2022-23ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி 

ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளி தொடங்கவிருக்கும் நாள், செயல்படும் நாட்கள், தேர்வு, விடுமுறை தினங்கள் என அனைத்துத் தகவல்களையும் கொண்ட காலஅட்டவணை பெற்றோர், மாணவர், ஆசிரியர்களின் நலனுக்கென மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 

5.2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம் கல்வியாண்டில் பல்வேறு வகையான ஆசிரியர்களும் மாதந்தோறும் பெறவேண்டிய அடிப்படை, திட்டம் சார்ந்த, தன்விருப்பப் பயிற்சிகளுக்கென காலஅட்டவணை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் தங்களது பயிற்சி குறித்து தெளிவாகத் தெரிந்து அதன் பயனை முழுமையாக பெறும் வாய்ப்பு ஏற்படும். 

ஆணையர் 
பள்ளிக்கல்வி

Post a Comment

Previous Post Next Post

Search here!