அரசுப்பள்ளி மாணவர் கற்றல் திறனை மேம்படுத்த, வினாடி-வினா போட்டிகளை நடத்த வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் சார்பில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களும், இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, அவர்களது கற்றல் திறன் மேம்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
சிறப்பாக, திறமையை வெளிப்படுத்தி, மாநில அளவில் தேர்வாகிறவர்களை, வெளிநாடு அழைத்துச் சென்று அரசு ஊக்கப்படுத்துகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான முதல் கட்ட போட்டிகளை ஜூலை, 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இரண்டாம் கட்டமாக ஆக., 6 முதல், 14ம் தேதி வரை, மூன்றாவது மற்றும் நான்காவது முறையே நவ., 5 முதல் 15, மற்றும் பிப்., 10 முதல், 14ம் தேதி வரை வினாடி-வினா போட்டிகளை நடத்த வேண்டும்.
வினாடி-வினாவுக்கான வினாத்தாளை, அந்தந்த வகுப்பாசிரியர் மட்டுமே உருவாக்க வேண்டும்.
மதிப்பீடு முடிந்த பின் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து, வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
இது தொடர்பாக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில், முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான சுற்றிக்கை, வழிகாட்டுதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment