கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்: பிளஸ்-2 வகுப்பில் எந்த பாடத்தில்
படித்தாலும், உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம் தமிழ்நாடு மத்திய
பல்கலைக்கழகம் தகவல்
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை
பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 'கியூட்' நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு
வருகிறது. இந்த கியூட் தேர்வை, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தி வருகிறது.
இந்த நிலையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வை வருகிற மே மாதம்
8-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ந் தேதி வரை நடத்த தேசிய தேர்வுகள் முகமை
திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது.
மாணவர்கள், https://cuet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் வருகிற 22-ந் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம். கியூட் நுழைவுத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு,
கன்னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. திருவாரூரில் இயங்கும்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில், வேதியியல்,
உயிரி தொழில்வியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதேபோல்,
இளங்கலை பொருளாதாரம், இளங்கலை இசை, இளங்கலை ஜவுளி, ஜவுளி தொழில்நுட்பவியல், ஜவுளி
வணிக பகுப்பாய்வு ஆகிய பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இதற்கு, பிளஸ்-2
வகுப்பில் எந்த பாடத்தில் படித்திருந்தாலும், மாணவர்கள் புதிய மாற்றங்களின்படி,
தங்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என தமிழ்நாடு மத்திய
பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. உதாரணமாக, பிளஸ்-2 வகுப்பில் அறிவியல்
பாடப்பிரிவை படித்த மாணவர், இளங்கலை பட்டப்படிப்பில் வரலாறு பாடத்தை தேர்வு செய்து
படிக்கலாம். இதற்கு, கியூட் தேர்வில் அதற்கான பாடத்தை தேர்வு செய்து நுழைவுத்தேர்வு
எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment