எந்த வாக்குச் சாவடியிலும் மக்கள் ஓட்டு போடலாம்- புதிய திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு 


 நாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா கூறினார். வாக்குரிமை உள்ள அனைவரும் தங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். அந்த அடிப்படையில் பல்வேறு தொழில் நுட்பங்களை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஓட்டுப்பதிவு தினத்தின்போது சொந்த இருப்பிடத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை உருவாகிறது. வாக்குகள் இருந்தும் அதனை பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கானவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டின் எந்த வாக்குசாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா கூறியதாவது:- வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் அதற்கான உரிமையை பெற்று இருந்தால் எந்த வாக்குச்சாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான மாதிரி ஓட்டுப்பதிவு விரைவில் நடத்தப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் வாக்குபதிவினை இதன் மூலம் பதிவு செய்யலாம். தொழில், கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் வாக்குரிமை இருந்தும் ஓட்டுப்போட முடியாத நிலை உருவாகிறது. புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முழுமையாக இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சி சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் சோதனை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தேசிய வாக்காளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மின்னணு புகைப்பட அட்டை வழங்கும் திட்டம் டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதார் அடையாள அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவை மின்னணு வடிவில் கிடைப்பது போல வாக்காளர் அடையாள அட்டையும் இனி கிடைக்கும். புதிய வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தங்களது செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم

Search here!