தனியார்மயமாக்கலை எதிர்த்து அடுத்த மாதம் 2 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம் 


 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. 

 ஐதராபாத்தில் ஆலோசனை 

 ஐதராபாத்தில், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய சம்மேளன கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ள 9 சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

 பிற்போக்கான நடவடிக்கை 

 ஐ.டி.பி.ஐ. வங்கி மற்றும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குதல், எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை, பொது காப்பீட்டு நிறுவனம் தனியார்மயமாக்கம், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை ஆகிய அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவை அனைத்தும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் என்றும், இவற்றை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த நடவடிக்கைகளை எதிர்த்து தீவிர போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

 வேலைநிறுத்தம் 

 அதன்படி, வருகிற 19-ந்தேதி, அனைத்து மாநில தலைநகரங்களில் தர்ணா நடத்தப்படும். 20-ந்தேதி முதல் மார்ச் 10-ந்தேதிவரை அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் தொடர் தர்ணாக்கள் நடத்தப்படும். இறுதியாக, மார்ச் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும். நிலைமையை பொறுத்து, மேலும் பல போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும். இந்த போராட்டங்களில் எல்லா சங்கங்களின் உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

أحدث أقدم

Search here!