ஓவியம், சிற்பக்கலையில் சிறந்து விளங்குபவர்கள் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு 


 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீன பாணி கலை வல்லுநர்கள் நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் மரபுவழி பிரிவில் 3 கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் 3 கலைஞருக்கும் என ஆண்டொன்றுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.1 லட்சம் விருது தொகையும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய விவரக் குறிப்பு, விண்ணப்பதாரரால் உருவாக்கப்பட்ட சிறந்த கலைப்படைப்புகளின் புகைப்படங்கள் (10 எண்ணிக்கைகள்), பங்கு கொண்ட கலைக்காட்சியின் விவரங்கள், இதுவரை பெற்றுள்ள சான்றிதழ்கள் அடங்கிய விவரங்களை ‘ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம் இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008' என்ற முகவரிக்கு மார்ச் 5-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!