ட்விட்டருக்கு மாற்றாக 'கூ' செயலியில் கணக்கு துவங்கும் மத்திய அமைச்சரவை 


 ட்விட்டருக்கு எதிராக மத்திய அரசு தனது நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ள நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குட்பட்ட பல்வேறு அமைப்புகள் 'கூ' (Koo) செயலியில் தங்களுடைய கணக்குகளை துவங்கி வருகின்றன. 

 டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரிஹன்னா ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்தனர். எங்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாட்டினர் தலையிட்டு, தவறான கருத்துக்களை பதிவிடுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல் என கண்டித்திருந்தனர். 

 மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில பதிவுகளில், இந்தியாவை பிளவுப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சர்ச்சைக்குரிய 250-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை ட்விட்டர் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்த்ததாக தெரியவில்லை. 

 இந்நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரிஹன்னா பதிவிட்ட கருத்தை, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டார்ஸி லைக் செய்தார். அதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. தற்போது மத்திய அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகள் 'கூ' செயலியின் கணக்குகளை துவங்கி வருகின்றன. அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா என்கிற இந்தியர்களால் உருவாக்கப்பட்ட செயலி தான் 'கூ'. ட்விட்டருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றது. 

கூ செயலி, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளர்ம், மராட்டி உள்ளிட்ட 11 இந்திய மொழிகளில் செயல்படுகிறது. தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிப்புத்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் கூ செயலிக்கு மாறி வருகின்றன. ஒவ்வொரு அரசு துறைக்கான பக்கங்களுக்கும் 'வெரிஃபைட் அக்கவுண்ட்' டேக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்துடன் டிஜிட்டல் இந்தியா, இந்திய அஞ்சல் துறை, சமீர், டிஜி லாக்கர் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளும் கூ செயலியில் தங்களுக்குரிய கணக்குகளை தொடங்கியுள்ளன. 

 கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 'கூ' செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனக்கான கூ செயலியில் தொடங்கினார். தற்போது அவருக்கு 2.34 ஃபாலோயர்ஸ்கள் உள்ளன. இந்தியாவின் பிராந்திய மொழிகளில் செயல்படுவது கூ செயலிக்கு பலமாக உள்ளது. அதனால் ஆங்கிலம் தெரியாதவர்களும் இதை எளிதில் பயன்படுத்தலாம். ஆங்கிலம், இந்தியை கடந்து நாட்டின் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم

Search here!