சர்ச்சைக்குரிய தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை ஏற்க, வரும், 15ம் தேதி வரை, பயனாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் ரத்து செய்துள்ளது.
உலகம் முழுதும், 200 கோடிக்கும் அதிகமான மக்களால் உபயோகிக்கப்பட்டு வரும், 'வாட்ஸ் ஆப்' செயலி, இந்த ஆண்டு துவக்கத்தில், 'பிரைவசி' எனப்படும், தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில், சில மாற்றங்களை செய்து அறிவித்தது. இந்த புதிய கொள்கையின்படி, 'வாட்ஸ் ஆப் பயனாளிகளின் தகவல்கள், அதன் தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய கொள்கைக்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. 'டெலிகிராம், சிக்னல்' உள்ளிட்ட மாற்று செயலிகளுக்கு, பயனாளிகள் மாறினர்.இதையடுத்து, இந்த புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்க வேண்டியதற்கான அவகாசம், மே, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பயனாளிகளுக்கு விதிக்கப்பட்ட அந்த காலக்கெடு, தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:'வரும், 15ம் தேதிக்குள், தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை ஏற்க வேண்டும்' என முதலில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு, ரத்து செய்யப்படுகிறது.
இதனால், இந்த புதிய கொள்கையை, வரும், 15ம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ளாத பயனாளிகளின் வாட்ஸ் ஆப் கணக்குகள், நீக்கப்படாது.
இந்திய மக்கள் யாருடைய வாட்ஸ் ஆப் செயலியும், இதனால் செயலிழக்காது. எனினும், இந்த புதிய கொள்கை குறித்து, மக்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம். வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் மக்களில் பெரும்பாலானோர், இந்த புதிய கொள்கையை ஏற்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
إرسال تعليق