தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும், தேவிபட்டினத்தில் தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 24 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏடிஎஸ் கொசுவை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மருத்துவத் தேர்வு வாரியம் மூலமாக 4,900 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அவர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்துக்கு 600 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்திக் கலனை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 

தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்திக் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில் இந்த ஆக்சிஜன் உற்பத்திக் கலன் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை டிசம்பர் 31-ம் தேதி வரை பணியில் அமர்த்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்றார்.

Post a Comment

أحدث أقدم

Search here!