நின்ற நிலையிலோ உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்கு கைகால்களில் நடுக்கமும் தசைத்துடிப்பும் ஏற்படும். 

சிலருக்கு குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன் படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு. இவை ஏற்பட்டவுடன் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் குறு மயக்கம் வராது. மயக்கம் அடைந்தவரை அப்புறப்படுத்தி, உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். ஆடைகளின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்திவிடுங்கள். 

இடுப்பு பெல்ட்டை அகற்றுங்கள். தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள். சில நிமிடங்களுக்கு பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது. தலையை ஒரு பக்கமாக சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக்குழாய் அடைபடாமல் இருக்கும். தலைக்கு தலையணை வைக்கக்கூடாது. பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முகத்தில் ‘சுளீர்' என தண்ணீர் தெளியுங்கள். அப்படி செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். அப்போது மயக்கம் தெளிந்து விடும். 

மயக்கம் தெளிந்த பின், குளுகோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம். ஐந்து நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நெடு மயக்கமாக இருக்கலாம். இதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது. வலிப்பு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி ஆகியவை உள்ளவர்களுக்கு நெடு மயக்கம் வரும். இதயத் துடிப்பு, ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும் மிக அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு. 

அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளைச் சாப்பிடுவது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக் கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நெடு மயக்கம் ஏற்படும். வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினை ஏற்படும்போது, அதிலிருந்து தப்பிக்க சிலர் மயக்கம் ஏற்பட்டுள்ளதுபோல் நடிப்பார்கள். அப்போது அந்த மயக்கம் உண்மையில்லை என எப்படித் தெரிந்துகொள்வது? அவருடைய கண் இமைகளை மேல்நோக்கி இழுங்கள். அவர் உண்மையிலேயே மயக்க நிலையில் இருந்தால், இமைகளை நீங்கள் மேல்நோக்கி இழுக்க முடியும். மயக்கம் அடைந்தது போல் நடிக்கிறார் என்றால், இமைகளை நீங்கள் மேலே இழுக்கும்போது அவர் இமைகளைத் திறக்கவிடமாட்டார். 

உண்மையில் மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கத்தில் உள்ளதுபோல் நடிப்பவர்களுக்கு இமைகளைத் திறந்தால் விழிகள் இங்கும் அங்கும் சுழலும். இவற்றிலிருந்து மயக்கம் உண்மையா, நடிப்பா என்று தெரிந்துகொள்ளலாம். முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பிறகு ‘முழு உடல் பரிசோதனை’யை மேற்கொள்வது அவசியம். மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது, மீண்டும் மயக்கம் ஏற்படுவதை தடுக்கும். 

பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மனபலத்தை உண்டாக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, தியானம் மற்றும் யோகாசனம் பயில்வது உதவும். பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக விளையாடக் கூடாது. அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் ‘ஜிம்னாஸ்டிக்', ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப்பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது.

Post a Comment

أحدث أقدم

Search here!