கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தது இறால். விதவிதமான வகைகளில் செய்யும் இறால் உணவுகளைச் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்த வகையில் உள்ளே மிருதுவாகவும், வெளியே மொறுமொறுப்பான சுவையிலும் செய்யக்கூடிய, ‘இறால் பால்ஸ்’ எவ்வாறு சமைப்பது என்பதை இங்கு காணலாம்... 

 தேவையான பொருட்கள்: 

 இறால் - 500 கிராம் 
மிளகு தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
முட்டை - 1 
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி 
சோளமாவு - 2 தேக்கரண்டி 
ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 2 
வெங்காயம் பெரியது - 1 
கொத்தமல்லித் தழை - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஊறவைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும். 

பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொறிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அதன் மேல் சிறிது கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

Post a Comment

أحدث أقدم

Search here!