விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு: முதல்-அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 'முதல்-அமைச்சர் கணினித்தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்குரிய முதல்-அமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்த சேரவேண்டிய இறுதி நாள் 31.12.2021 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் வருகிற 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள், தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு 28-ந்தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 28190413 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!