புளூடூத் மூலம் இயங்கும் சாவி இல்லாத பூட்டு 

சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பலை பல இடங்களில் கேட்டு இருப்போம். சாவியை தொலைத்து சங்கடப்படக்கூடாது என்பதற்காக நம்பர் பூட்டுகளும் வந்தன. ஆனால், நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸ், பெட்டிகளை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும், ஆனால் சாவி இருக்கக்கூடாது, அதே நேரத்தில் பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்பது பலருக்கான ஆசை. தொழில்நுட்ப வளர்ச்சி இதை சாத்தியப்படுத்தி உள்ளது. 
 பூட்டலாம், ஆனால் சாவி வேண்டியதில்லை. சாவி இல்லாமலே திறக்கலாம். கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ‘நோ கீ’ என்பதன் சுருக்கமாக ‘நோக்’ எனப்படும் இந்த ரக பூட்டு, புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும். 
இந்த பூட்டை உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொண்டால் போதும். இரண்டு சிக்னலும் மேட்ச் ஆகும்போது மட்டுமே பூட்டு திறக்கும். இந்த பூட்டை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். சைக்கிளை பூட்டலாம், மோட்டார் சைக்கிளை பூட்டலாம், ெரயிலில் செல்கிறீர்களா? லக்கேஜ்களை ஒன்றாக இணைத்தும் பூட்டலாம். உங்களது குடும்பத்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் வீட்டு கதவின் பூட்டை திறக்க விரும்பினாலும் அதற்கும் வழியிருக்கிறது. ஒரு முறையோ அல்லது எப்போதுமோ அவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த பூட்டை உபயோகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. யார் யார் எப்போதெல்லாம் பூட்டை திறந்தார்கள் எனும் ‘ஹிஸ்டரியையும்’ அப்ளிகேஷன் மூலம் பார்த்துக்கொள்ளலாம். 
எனவே பாதுகாப்பு பற்றி பயப்பட வேண்டியதில்லை. ஒருவேளை மொபைல் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்ற கவலையும் வேண்டாம். அதற்கும் பாஸ்வேர்டு செட் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. ’நோக்’ வகை பூட்டில் உள்ள பேட்டரி அதற்குப் பயன்படும், என்கிறார்கள் இந்த ரக பூட்டினை உருவாக்கிய தொழில் நுட்பவியலாளர்கள்.

Post a Comment

أحدث أقدم

Search here!