ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு, வருகிற ஆகஸ்டு மாதம் மீண்டும் மறுதேர்வாக நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 
தேர்வு ரத்து நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் கடந்த 18-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் எழுதினார்கள். தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், வெளிப்படத்தன்மை தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, நடைபெற்று முடிந்த நெட் தேர்வை ரத்து செய்து கடந்த 19-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. விரைவில், மறு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. 

புதிய தேதி இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட ஜூன் மாதத்துக்கான யு.ஜி.சி. நெட் தேர்வு, வருகிற ஆகஸ்டு 21-ந்தேதியும், வருகிற செப்டம்பர் 4-ந்தேதியும் கணினி வழி தேர்வாக நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருந்த சி.எஸ்.ஐ.ஆர் யு.ஜி.சி நெட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வானது வருகிற ஜூலை மாதம் 25 முதல் 27-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்புக்கான என்.சி.இ.டி நுழைவுத் தேர்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!